search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்-அப்
    X
    வாட்ஸ்-அப்

    உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு விளக்கம் கேட்கிறது

    இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் உள்பட உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. உலகம் முழுவதும் பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறியது.

    இதுகுறித்து ‘வாட்ஸ்-அப்’ கூறியதாவது:-

    இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு நிறுவனம், ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை தயாரித்துள்ளது. அந்த மென்பொருளை பயன்படுத்தி, அடையாளம் தெரியாத சில நிறுவனங்களின் உளவாளிகள், உலகம் முழுவதும் 1,400 பேரின் மொபைல் போன்களில் ஊடுருவி தங்கள் வசப்படுத்தி உள்ளனர். அந்த போன்களில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பரிமாறப்படும் முக்கியமான தகவல்களை திருடி உள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ தகவல் பரிமாற்றங்களை உளவு பார்த்துள்ளனர்.

    உளவு பார்க்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் 4 கண்டங்களில் இருக்கிறார்கள். இவர்களில், இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் எதிரிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.

    இந்த தகவல் அறிந்தவுடன் என்.எஸ்.ஓ. நிறுவனம் மீது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேலும், உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 1,400 பேரின் மொபைல் போன்களுக்கும் விசேஷ ‘வாட்ஸ்-அப்’ செய்தி அனுப்பி, உஷார்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் கூறியது.

    ஆனால், இந்தியாவில் எத்தனை பேர் உளவு பார்க்கப்பட்டனர் என்ற விவரத்தை ‘வாட்ஸ்-அப்’ தெரிவிக்கவில்லை. யாருடைய உத்தரவின்பேரில், உலகம் முழுவதும் உளவு பார்க்கப்பட்டது என்ற விவரத்தையும் கூறவில்லை.

    பயனாளர்களின் அடிப்படை அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க ‘வாட்ஸ்-அப்’ உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் வில் கேத்கார்ட் தெரிவித்துள்ளார். உளவு விவகாரத்தை விசாரிக்க ‘வாட்ஸ்-அப்’புக்கு டொரண்டோ பல்கலைக்கழகத்தில் உள்ள சிட்டிசன் ஆய்வுக்கூடம் உதவி செய்துள்ளது.

    இந்நிலையில், உளவு மென்பொருளை உருவாக்கியதாக கூறப்படும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியதாவது:-

    இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறோம். இதை சட்டரீதியாக எதிர்த்து போராடுவோம். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் கடுமையான குற்றங்கள் ஒழிப்புக்காக புலனாய்வு அமைப்புகள், விசாரணை அமைப்புகள் ஆகியவற்றுக்கு நவீன தொழில்நுட்பம் அளிப்பதுதான் எங்கள் நோக்கம். மற்றபடி, பத்திரிகையாளர்கள், மனித உரிமைவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த நாங்கள் எந்த தொழில்நுட்பத்தையும் வடிவமைக்கவில்லை. எங்கள் தொழில்நுட்பத்தால், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    உண்மை என்னவென்றால், ரகசிய பாதுகாப்பு முறைகள் உள்ள ‘வாட்ஸ்-அப்’பை பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். நவீன தொழில்நுட்பம் இல்லாமல், விசாரணை அமைப்புகளால் இந்த சவாலை எதிர்கொள்ள முடியாது.

    எங்கள் தொழில்நுட்பம் இதற்கு சட்டப்பூர்வ தீர்வை அளித்து வருகிறது. அதை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறியுள்ளது.

    இதற்கிடையே, இந்த உளவு விவகாரம், இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

    குற்றச்சாட்டு குறித்தும், இந்தியாவில் எத்தனைபேர் உளவு பார்க்கப்பட்டனர் என்பது பற்றியும் விரிவான விளக்கத்தை நவம்பர் 4-ந் தேதிக்குள் அளிக்குமாறு ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. இத்தகவலை மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அதே சமயத்தில், உளவு விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உளவு பார்த்ததாக மோடி அரசு பிடிபட்டுள்ளது. இது, அதிர்ச்சி அளித்தாலும், ஆச்சரியம் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோரை ஒரு அரசு உளவு பார்க்கிறது. சொந்த குடிமக்களையே குற்றவாளிகளாக பார்க்கும் அரசு, நாட்டை வழிநடத்தும் உரிமையை இழந்து விட்டது. ஆகவே, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து இந்த குற்றச்சாட்டை, கையில் எடுக்க வேண்டும். மத்திய அரசை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×