search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
    X
    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

    நீண்டகால நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - ஆந்திரா அரசு அறிவிப்பு

    நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது.
    ஐதராபாத்:

    ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்றது. இவர் தனது பதவியேற்பு விழாவிலேயே, முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2,250 வழங்கக்கூடிய திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டு மக்களை நெகிழ்ச்சியடைய செய்தார். 

    ஆஷார திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிர ரூபாய் ஊக்கத்தொகையை 10 ஆயிரம் ரூபாயாக மாற்றி உத்தரவிட்டார்.  பத்திரிக்கையார்களுக்கான 10 லட்சம் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மணல் கொள்முதலுக்கு ஆன்லைன் பதிவு முறையை தொடங்கினார். மணல் கொள்ளையை தடுக்கவே இந்த முறை ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

    ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலைமையை மாற்ற வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  ஆட்டோ ஓட்டுனர்களின் பொருளாதாரா நெருக்கடியை சிறிது குறைக்க ''வாஹன் மித்ரா'' என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவ, மாணவிகளின் உணவு மற்றும் உறைவிட செலவை அரசு ஏற்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ 20 ஆயிரம் நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து  ''ஆரோக்கிய ஸ்ரீ'' என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியுள்ளார்.  

    இதன் மூலம் அம்மாநில மக்கள் ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழ்நாடு, கர்நாடக மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். இதற்கான செலவை ஆந்திர அரசே ஏற்கும். 2024 ஆம் ஆண்டிற்குள் பூரண மது விலக்கை அமல்படுத்துவதாக கூறியுள்ளார்.  தொடர்ந்து ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில்,மேலும் ஒரு புதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். அதன்படி நீண்டகால நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு மாத பென்ஷன் வழங்கும் முடிவை ஆந்திர அரசு எடுத்துள்ளது. அதாவது தலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நோய் பாதிப்பால் நடமாட முடியாமல் முடங்கி உள்ளவர்கள் மற்றும் சக்கர நாற்காலியிலுள்ள நோயாளிகள், சிறுநீரக பாதிப்புகளால் அவதிபட்டு வருபவர்கள் என அனைவருக்கும் மாதம் 5000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகளை பெற மக்கள் உள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து சான்றிதழ் பெற்று தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்குறுதிகளை கூறியது மட்டுமில்லாமல் அதை மிக வேகமாக செயல்படுத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்வேகம் ஆந்திர அரசியலில் கோடிட்டு காட்டுகிறது.
    Next Story
    ×