search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதித்யா தாக்கரேவை முதல் மந்திரியாக முன்னிலைப்படுத்தி உத்தவ் தாக்கரே வீட்டின் அருகே பேனர்
    X
    ஆதித்யா தாக்கரேவை முதல் மந்திரியாக முன்னிலைப்படுத்தி உத்தவ் தாக்கரே வீட்டின் அருகே பேனர்

    மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே மகனுக்கு இரண்டரை ஆண்டு பதவி - சிவசேனா வலியுறுத்தல்

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்னும் நிபந்தனை வலுத்து வருகிறது.
    மும்பை:

    288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 21-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
     
    இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 145 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.

    ஆளும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தகுதியை பெற்றது. இந்த கூட்டணியில் 164 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன.

    காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களை கைப்பற்றியது. இந்த அணியில் 147 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 44 இடங்களும், 121 தொகுதிகளில் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன.

    பிற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைத்தன. 13 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    புதிய அரசை அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு இருந்தபோதிலும், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி பதவியை யார் வகிப்பது? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை மந்திரி பதவிகள்? என்று முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

    மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தேவேந்திர பட்னாவிஸ்தான் மறுபடியும் முதல்-மந்திரி ஆவார் என்றும் பாரதிய ஜனதா தேர்தலுக்கு முன்பே அறிவித்தது. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

    பிரதாப் சர்நாயக்

    ஆனால், முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இதேபோல் மந்திரி பதவிகளையும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதிலும் சிவசேனா உறுதியாக இருக்கிறது. மும்பை ஒர்லி தொகுதியில் வெற்றி பெற்ற தனது மகன் ஆதித்யா தாக்கரேவை முதல்-மந்திரியாக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

    ஆனால் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க பாரதிய ஜனதா தயாராக இல்லை. முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதனால், கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரும் முன், உத்தவ் தாக்கரேயுடன் கலந்து பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் அமித்‌ஷா விரும்புகிறார். இது தொடர்பாக அவர் விரைவில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேச இருக்கிறார்.

    புதிய அரசு அமைப்பதில் பாரதி ஜனதா-சிவசேனா கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதால், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

    இந்த சூழ்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்.பி., தனது டுவிட்டர் பக்கத்தில் புலி (சிவசேனா கட்சியின் அடையாளம்) ஒன்று தனது கழுத்தில் கெடிகாரத்துடன் (தேசியவாத காங்கிரஸ் சின்னம்) கூடிய சங்கிலியை அணிந்தபடி, தாமரையை (பாரதிய ஜனதாவின் சின்னம்) முகர்ந்து பார்ப்பது போன்ற கேலிச்சித்திரத்தை வெளியிட்டு இருந்தார்.

    ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிட சிவசேனா தயாராக இல்லை என்பதையே இந்த கேலிச்சித்திரம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

    ஆனால் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க தாங்கள் தயாராக இல்லை என்பதை காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தெளிவுபடுத்தி இருக்கின்றன.

    இதுபற்றி மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசுகையில், பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக சிவசேனாவுடன் கைகோர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், சட்டசபையில் காங்கிரஸ் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் தெரிவித்தார்.

    இதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

    உத்தவ் தாக்கரே தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில், புதிய அரசு அமைப்பதில் சிவசேனாவின் நிலைப்பாடு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், இந்த சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவசேனா கட்சி பிரமுகரும் தானே தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரதாப் சர்நாயக் ’பாராளுமன்ற தேர்தல் கூட்டணியின்போது 50:50 என பாஜக தலைவர் அமித் ஷாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

    எனினும், இதுதொடர்பான இறுதி முடிவை உத்தவ் தாக்கரே அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த ஏற்பாடு பாஜகவுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆதித்யா தாக்கரேவை முதல் மந்திரியாக்கி, புதிய கூட்டணி அரசு அமைக்கும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு பிரதாப் சர்நாயக் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
     
    Next Story
    ×