search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    டெல்லி, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயாராகிறது

    டெல்லி, ஜார்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை பதவிக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி, ஜார்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.

    முதல்-மந்திரி ரகுபர் தாஸ் ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் முதற் கட்ட யாத்திரையை நடத்தி முடித்துவிட்டார். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையும் தொடங்கி உள்ளார்.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று பா.ஜனதா செயல் தலைவர் நட்டா ஜார்கண்ட் மாநில பா.ஜனதா தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸ்

    எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும்? எந்தெந்த தலைவர்களை பிரசாரத்துக்கு அழைப்பது? பிரசாரத்தில் எத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க முடியாமல் பா.ஜனதா உள்ளது. எனவே டெல்லியில் இந்த தடவை ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற இலக்குடன் உள்ளனர்.

    டெல்லி சட்டசபை பதவிக்காலம் நிறைவுபெற இன்னும் சில மாதங்கள் உள்ளது. என்றாலும் அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுடன் டெல்லி சட்ட சபைக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    டெல்லி, ஜார்கண்ட் மாநிலத்தை கைப்பற்ற பா.ஜனதா தீவிரமாகி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் சுறுசுறுப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    சோனியா, ராகுல் இருவரும் தீவிர கட்சி பணிகளை செய்யாததால் மற்ற மூத்த தலைவர்களும் செயல்பட முடியாமல் தவித்து வருகிறார்கள். இதேநிலை நீடித்தால் டெல்லி, ஜார்கண்ட் மாநிலங்களில் மீண்டும் தோல்வியை தழுவ நேரிடும் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×