search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது - பா.ஜனதா அரசு உத்தரவு

    அசாம் மாநிலத்தில் 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது என்று பா.ஜனதா அரசு உத்தரவிட்டுள்ளது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சர்பானந்தா சோனோவால் உள்ளார்.

    இந்த நிலையில் அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

    அசாம் மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கொள்கையை நடை முறைப்படுத்த முடிவு செய்தது.

    அதன்படி சிறிய குடும்பத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அசாம், சட்டசபையில், 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.

     

    சர்பானந்தா சோனோவால்

    இந்த நிலையில் மக்கள் தொகை கொள்கை தொடர்பாக முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. மக்கள் தொகை கொள்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இதில், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.

    தற்போது அரசு பணியில் இருப்பவர்களும் இந்த விதியை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

    மேலும் நிலங்கள் இல்லாத அசாம் மக்களுக்கு அரசு நிலம் வழங்குவது மற்றும் வீடு கட்டுவதற்கு நிலம் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இலவசமாக வழங்கப்படும் நிலங்களை 15 ஆண்டுகளுக்கு விற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் ஒருவர் கூறும் போது, “அசாம் மாநிலத்தில் நிலத்தின் மீது உள்ள அதிக நெருக்கடியை சமாளிக்க கட்டுப்பாட்டு கொள்கையை தீவிரமாக அமல்படுத்த உள்ளோம்.

    மேலும் நிலங்கள் இல்லா குடும்பங்களுக்கு நிலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார். அசாம் மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 5.5 ஆக உள்ளது. இது தேசிய அளவிலான சராசரியை விட அதிகமாக இருக்கிறது.

    Next Story
    ×