search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வ்ங்காளதேசப் படை மற்றும் இந்தியப் படை
    X
    வ்ங்காளதேசப் படை மற்றும் இந்தியப் படை

    இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரை சுட்டுக் கொன்ற வங்காளதேச ராணுவம்

    இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது வங்காளதேச ராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
    கொல்கத்தா:

    இந்தியா மற்றும் வங்காளதேசத்தை பிரிக்கும் எல்லை சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரத்தை கொண்டது. பெரும்பாலான எல்லை பகுதி மேற்குவங்காளத்தை சுற்றியே அமைந்துள்ளது. வங்காளதேசம் நட்பு நாடு என்பதால் இதுவரை எல்லை ரீதியிலான மிகப்பெரிய பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையே எழுந்தது இல்லை. 

    இந்நிலையில், கொல்கத்தாவின் முஷிர்தாபாத் மாவட்டத்தில் உள்ள ஷைரொஷர் கிராமத்தில் இருந்து 3 மூன்று மீனவர்கள் இரு நாட்டு எல்லையில் உள்ள பத்மா ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் சர்வதேச எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 3 பேரையும் சிறைபிடித்தனர். 

    பின்னர் அவர்களில் 2 பேரை மட்டும் விடுதலை செய்து விட்டு இந்த தகவலை இந்திய படையினரிடம் தெரிவிக்கும்படி எச்சரித்து அனுப்பிவைத்தனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக இந்திய எல்லை படையினரிடம் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து, வங்காளதேச படையினரால் கைது செய்யப்பட்ட மீனவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 6 பேர் கொண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் படகு ஒன்றில் சென்று வங்காளதேச வீரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் சென்றனர். 

    உயிரிழந்த வீரர்

    ஆனால், ஆற்றின் நடுவே சர்வதேச எல்லையில் வங்காளதேச படையினர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்திய வீரர்கள் சென்ற படகை சுற்றிவளைக்க முயன்றதால் பாதுகாப்பு படையினர் தங்கள் படகை திருப்பி மீண்டும் இந்திய எல்லைக்கு செல்ல முற்பட்டனர். 

    அப்போது திடீரென வங்காளதேச படையை சேர்ந்த சையது என்ற வீரர் இந்திய பாதுகாப்பு படையினர் சென்ற படகை பின்னால் இருந்து குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

    இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத இந்திய படையினர் நிலைகுலைந்தனர். இந்த திடீர் தாக்குதலில் படகில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரின் தலை மீது குண்டு பாய்ந்து படகிலேயே உயிரிழந்தார். மற்றொரு இந்திய வீரரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தார். 

    இதையடுத்து, படுகாயமடைந்த இந்திய படை வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது வங்காளதேச படையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு அதில் ஒரு இந்திய வீரர் உயிரிழந்துள்ளது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வங்காளதேச ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×