search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமானம்
    X
    ரபேல் போர் விமானம்

    ரபேல் போர் விமானத்துக்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ - தசரா கொண்டாட பிரான்ஸ் செல்லும் ராஜ்நாத் சிங்

    இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள ரபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொள்ள செல்லும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தசரா தினத்தன்று அங்கு சிறப்பு ‘ஆயுத பூஜை’ செய்யவுள்ளார்.
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும். இந்த விமானம் இந்திய ராணுவத்துக்கு மிகவும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் தெரிவித்திருந்தார்.
     
    இந்நிலையில், ரபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல்கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    ராஜ்நாத் சிங்

    பிரான்சில் உள்ள மெரிக்னாக் என்ற பகுதியில் நடைபெறவுள்ள ரபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி பதவுரியா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ராஜ்நாத் சிங், தசரா தினத்தன்று அங்கு 'ஷாஸ்திரா பூஜா’ எனப்படும் (போர் ஆயுதங்களை வைத்து பூஜித்தல்) சிறப்பு ‘ஆயுத பூஜை’  செய்யவுள்ளார். முன்னர் மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது ஆண்டுதோறும் தசரா நாளில் இதுபோன்ற பூஜைகளை ராஜ்நாத் சிங் செய்து வந்துள்ளார்.

    தற்போது ராணுவ மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பிரான்ஸ் நாட்டில் அவர் 'ஷாஸ்திரா பூஜா’ செய்யவுள்ளார் என பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×