search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் செம்மரக்கட்டைகளுடன் கைதான திருவண்ணாமலை வாலிபர்
    X
    திருப்பதியில் செம்மரக்கட்டைகளுடன் கைதான திருவண்ணாமலை வாலிபர்

    திருப்பதியில் செம்மரக்கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு - வாலிபர் கைது

    திருப்பதியில் செம்மரக்கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் திருவண்ணாமலை வாலிபரை கைது செய்தனர்.
    திருப்பதி:

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இவற்றிற்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி உள்ளதால் செம்மரம் வெட்டி கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. வெங்கட்டய்யா, இன்ஸ்பெக்டர் விஜயநரசிம்மலு ரவிசங்கர் தலைமையிலான செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சேஷாசலம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் சந்திரகிரி பீமாவரம் அடுத்த முள்ளப்பல்லி செருவு என்ற இடத்தில் செம்மரம் வெட்டும் சத்தம் கேட்டது. இதனால் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    அப்போது செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

    செம்மர கடத்தல் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    அங்கு இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்தனர். மற்றும் பிடிபட்ட வரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிடிபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த நாச்சிமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது36) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவருடன் எத்தனை பேர் வந்தனர். யார்? யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×