search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்மோகன் சிங்
    X
    மன்மோகன் சிங்

    ப.சிதம்பரத்தை மட்டும் குற்றம்சாட்டுவது ஏன்? - மன்மோகன்சிங் கேள்வி

    ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் 12 அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் ப.சிதம்பரத்தை மட்டும் குற்றம்சாட்டுவது ஏன் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 3-ந்தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினார்கள்.

    ப சிதம்பரம்

    இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக மன்மோகன்சிங் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ப.சிதம்பரம் தொடர்ந்து காவலில் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நீதியை நிலை நாட்டும் என்று நாங்கள் உறுதியுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

    நமது அரசினுடைய அமைப்பில் தனி நபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைந்த முடிவுகள் தான்.

    அரசின் 6 செயலாளர்கள் உள்பட மொத்தம் 12 அதிகாரிகள் ஆய்வு செய்து ஒருமனதாக பரிந்துரை செய்ததை ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்து இருக்கிறார்.

    அதிகாரிகள் தவறு இழைக்கவில்லை எனும் பட்சத்தில் அந்த பரிந்துரைகளுக்கு வெறும் ஒப்புதல் மட்டுமே அளித்த அமைச்சர் குற்றம் செய்தவராக குற்றம் சாட்டுவது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது, ஒப்புதல் வழங்கியதற்கு அமைச்சர் மட்டும்தான் பொறுப்பு என்றால் அது அரசின் ஒட்டுமொத்த அமைப்பையே தகர்த்து விடும்.

    இவ்வாறு மன்மோகன்சிங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×