search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட ஆசிரியர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய்
    X
    கொலையுண்ட ஆசிரியர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய்

    ஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்

    மும்பையில் 4-ம் வகுப்பு மாணவன் ஆசிரியையை குத்திக் கொலை செய்ததற்கு அவன் கூறிய காரணங்களால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
    மும்பை:

    மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். இவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். ஆயிஷா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய், மகனுடன் வசித்து வந்தார்.

    இவரிடம் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் டியூசன் படித்து வந்தான்.

    இந்த நிலையில், மாணவனின் தாய், ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். கடன் தர மறுத்த ஆயிஷா மாணவனின் தாயை திட்டியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த மாணவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதன் பிறகு மாணவனும், தாயும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பின்னர் மாணவன் கத்தியுடன் ஆயிஷா வீட்டிற்கு வந்தான். அங்கு முகம் கழுவிக்கொண்டிருந்த ஆயிஷாவை சரமாரியாக கத்தியால் குத்தினான். இதில் வயிற்றில் பலத்த காயம் அடைந்த ஆயிஷா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    உயிருக்கு போராடிய ஆயிஷாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை குத்திக்கொன்ற 9 வயது மாணவனை கைது செய்தனர். அவன் போலீசாரிடம் கூறும்போது, ஆசிரியையிடம் தனது தாய் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்து திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்து அவரை குத்திக் கொன்றதாக தெரிவித்தான்.

    ஆனால், மாணவன் கொலைக்கு வேறு 2 காரணங்களையும் தெரிவித்திருக்கிறான். அவன் தனது வீட்டு அருகே வசிப்பவர்களின் முன்பு ஆசிரியை தன்னை அடித்ததாகவும் அதனால் கோபத்தில் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளான்.

    தனது தந்தையிடம் கூறும் போது சிலர் ஆசிரியையை குத்திக்கொல்ல ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் அப்படி செய்யவில்லை என்றால் தன்னை ஆற்றில் தூக்கி வீசிவிடுவதாக மிரட்டினார்கள் என்றும் கூறியுள்ளான்.

    மாணவனின் இந்த வாக்குமூலங்களால் போலீசார் குழப்பமடைந்து இருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக அவனிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×