search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    பொருளாதார மந்த நிலைக்கு என்ன தீர்வு? -இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதி மந்திரி

    நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது.

    பொருளாதார மந்த நிலையை சமாளிக்கும் வகையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23-ந் தேதி சில அறிவிப்புகளை வெளியிட்டார். சரிவை சந்தித்து வந்த மோட்டார் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அவர் அறிவித்தார்.

    வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

    வீட்டுக்கடன், வாகன கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தநிலையில் ஆகஸ்ட் 30-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அரசு நடவடிக்கையாக, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

    இந்நிலையில், இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்பொது அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த மேலும் சில அறிவிப்புகளை அவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×