search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் லாரி டிரைவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ரூ.2 லட்சம்தான்

    டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

    மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு அபராதத்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். புதிய அபராத விதிமுறைகளால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படும் எனக்கூறி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    அபராதத் தொகைக்கான ரசீது

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள முகர்பா சவுக் பகுதியில் அதிக சுமையை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த சரக்கு லாரியை மறித்த போக்குவரத்து போலீசார் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றிவந்ததால் புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் படி சாலை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 500 ரூபாயை அபராதமாக விதித்தது. அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீதை லாரி ஓட்டுநரிடம் போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

    புதிய மோட்டார் வாகனச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சாலை விதிகளை மீறியதாக நாட்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×