search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்ரம் லேண்டர்
    X
    விக்ரம் லேண்டர்

    நிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

    தரை இறங்கும்போது நிலவில் விழுந்த ‘விக்ரம் லேண்டர்’ உடையாமல் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
    பெங்களூரு:

    நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.

    ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

    கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், குழந்தையை தொட்டிலில் போடுவது போன்று மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

    லேண்டரின் கதி என்ன ஆனது? என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், நிலவுக்கு அருகே தென்துருவத்தில் 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் தரையில் லேண்டர் விழுந்து கிடப்பதை நேற்று முன்தினம் கண்டுபிடித்தது. ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா விழுந்து கிடக்கும் லேண்டரை படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று முன்தினம் தெரிவித்தார். லேண்டர் சேதம் அடைந்ததா? என்பது பற்றி தெரியவில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.

    இந்த நிலையில், சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் லேண்டர் உடைந்து நொறுங்காமல் கிடப்பது தெரியவந்து உள்ளது.

    இதுபற்றி பெங்களூருவில் நேற்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்காமல், சாய்ந்த நிலையில் நிலவின் தரையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

    தரை இறங்கும்போது வேகமாக கீழ் நோக்கி வந்த லேண்டர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு (மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் பள்ளங்களுக்கு இடையே) அருகிலேயே விழுந்து இருப்பது ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.

    மற்றொரு அதிகாரி கூறுகையில், லேண்டரின் 4 கால்களும் ஒரே சமயத்தில் நிலவின் தரை பகுதியை தொட்டு இருந்தால், அது சாய்ந்து இருக்காது என்றும், வேகமாக வந்ததால் அது சாய்ந்து விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார். லேண்டரில் உள்ள ஆன்டெனாக்கள் ஆர்பிட்டரை நோக்கியோ அல்லது பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தை நோக்கியோ இருந்தால்தான் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றும், இல்லையேல் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார்.

    லேண்டரின் வெளிப்புற பகுதியில் சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் இருப்பதாலும், உள்பகுதி பேட்டரிகள் நல்ல நிலையில் இருக்கும் என்பதாலும், அதற்கு மின்சார சப்ளை கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    தரையில் விழுந்து கிடக்கும் லேண்டர் செயல்படும் நிலையில் உள்ளதா? என்பது பற்றியும் மீண்டும் அதனுடன் எப்படி தொடர்பு கொள்வது? என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஆர்பிட்டர்

    ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா மூலம், விழுந்து கிடக்கும் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க அவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதற்காக ஆர்பிட்டரை நிலவுக்கு அருகே கொண்டு வர விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஆர்பிட்டர் தற்போது 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது. அந்த உயரத்தை 50 கி.மீ. ஆக குறைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான் என்றபோதிலும், 7 ஆண்டுகள் செயல்படுவதற்கான எரிபொருள் அதில் இருப்பதாக இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×