search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாட்டு அறையில் இருந்து விக்ரம் லேண்டரை கண்காணிக்கும் விஞ்ஞானிகள்
    X
    கட்டுப்பாட்டு அறையில் இருந்து விக்ரம் லேண்டரை கண்காணிக்கும் விஞ்ஞானிகள்

    நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர்- சுற்றுவட்டப்பாதை மேலும் குறைப்பு

    சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தனியாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது.
    பெங்களூரு:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பினார்கள். இந்த விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றி வந்த நிலையில், அதன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது.

    நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவை நெருங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், நிலவை சுற்றி வரும் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டது.

    அதன்பின்னர் நேற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலத்தில் (ஆர்பிட்டர்) இருந்து நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தரைதளத்தில் இருந்து கொண்டே சந்திரயானில் இருந்து லேண்டரை பிரித்தனர். மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை இந்த பணி நடந்தது.

    விக்ரம் லேண்டர்

    தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவை அதன் சுற்றுவட்டப்பதையில் சுற்றி வருகிறது. அதன் நீள்வட்ட சுற்றுப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்டது. இதற்காக 4 வினாடிகள் அதன் என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது, நிலவின் நீள்வட்டப்பாதையில் குறைந்தபட்சமாக  104 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக  128 கிமீ தொலைவிலும் லேண்டர் சுற்றத் தொடங்கி உள்ளது. இதேபோல் ஆர்பிட்டரும் தனியாக நிலவை அதன் சுற்றுப் பாதையில் சுற்றி வருகிறது. லேண்டரும் ஆர்பிட்டரும் நல்ல நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இனி நாளை அதிகாலை லேண்டரின் சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்படும். இந்தப் பணி நாளை அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் குறைந்தபட்சம் 36 கி.மீ. தொலைவு கொண்ட நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லேண்டர் வந்து விடும்.

    இந்த 36 கி.மீ. தூரத்தில் இருந்தபடி வரும் 7-ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்குவதற்கான பணிகள் நடைபெறும். மெல்ல மெல்ல நிலவின் மேற்பரப்பு நோக்கி நகரும் லேண்டர், நிலவில் தரையிறங்கியதும் அதில் இருந்து ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உள்ளது. 
    Next Story
    ×