search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம்பிடித்து மிரட்டல்- குமரி கட்டிட தொழிலாளி கைது

    திருவனந்தபுரம் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம்பிடித்து மிரட்டிய குமரி கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 35). கட்டிட தொழிலாளியான விஜி, கட்டிட வேலைக்காக அடிக்கடி கேரளாவுக்கு சென்று வருவார். சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே நேமம் பகுதிக்கு கட்டிட வேலைக்காக விஜி சென்று இருந்தார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் விஜி கூறி அவரிடம் நெருங்கி பழகினார்.

    அந்த பெண்ணின் பெற்றோர் இல்லாத நேரங்களில் விஜி அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் திருமண ஆசைக்காட்டி கற்பழித்து உள்ளார். மேலும் அந்த பெண்ணை சமாதானப்படுத்துவதற்காக மாலை மாற்றி திருமணமும் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பம் அடைந்ததால் அதுபற்றி விஜியிடம் அவர் கூறினார். இதனால் அவரை அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்து உள்ளார். இதேப்போல 2 முறை அந்த பெண்ணுக்கு கரு கலைப்பு செய்யப்பட்டு உள்ளது.

    நாளடைவில் அந்த பெண் தன்னை ஊர் அறிய திருமணம் செய்துகொள்ளும் படி விஜியிடம் கேட்டுக் கொண்டார். இதனால் அவரை சந்திப்பதை விஜி குறைத்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவருடன் நெருக்கமாக இருந்த போது தான் செல்போனில் படம் பிடித்த காட்சிகளை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டினார். இதனால் பயந்துபோன அந்த பெண் நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி கண்ணீர்விட்டு அழுதார்.

    மகளுக்கு நடந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி நேமம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விஜியை தேடி வந்தனர். அப்போது திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் வைத்து விஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது விஜி மீது குமரி மாவட்டத்திலும் போலீஸ் நிலையங்களில் சில வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×