search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவை நோக்கி செல்லும் சந்திரயான் 2 விண்கலம்
    X
    நிலவை நோக்கி செல்லும் சந்திரயான் 2 விண்கலம்

    அபாரம்... நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2

    இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்தது.
    பெங்களூர்:

    நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

    புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 

    பின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. 

    நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2  விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க  திட்டமிடப்பட்டது. அதன்படி சந்திரயானின் திரவ என்ஜின் இன்று காலை 1738 வினாடிகள் இயக்கப்பட்டது. 

    நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் (மாதிரி படம்)

    இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2-ம் தேதி பிரியும். அந்த லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
    Next Story
    ×