search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி
    X
    எம்எஸ் டோனி

    காஷ்மீரில் டோனிக்கு எதிராக கோஷம்- வைரல் வீடியோவின் உண்மை பின்னணி

    காஷ்மீரில் எம்எஸ் டோனிக்கு எதிராக பூம் பூம் அப்ரிடி எனும் கோஷம் எழுப்பப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
    காஷ்மீரில் எம்எஸ் டோனிக்கு எதிராக பலர் பூம் பூம் அப்ரிடி எனும் கோஷம் எழுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பல செய்தி நிறுவனங்கள் இதுபற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன. பலர் இது சார்ந்து வைரலாகும் பதிவுகளை தங்களது ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

    காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. காஷ்மீர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் அப்பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், எம்எஸ் டோனிக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முயன்றதில், வீடியோ 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. பழைய வீடியோ தற்சமயம் நடைபெற்ற சம்பவமாக பலர் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

    வைரல் பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்

    எம்எஸ் டோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் அவர் ராணுவத்தில் சேவையாற்றி வருகிறார். ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை ராணுவத்தில் சேவையாற்றும் டோனி காஷ்மீரில் ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தற்சமயம் எடுக்கப்பட்டது என்பதை நம்பவைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

    வைரல் வீடியோ தலைப்பை இணையத்தில் தேடியபோது யூடியூபில் உண்மையான வீடியோ காணக்கிடைத்தது. 51 வினாடிகள் ஓடும் வீடியோ நவம்பர் 17, 2017 இல் எடுக்கப்பட்டதாகும். இதனை ஆரம்பி ஸ்போர்ட்ஸ் எனும் பாகிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனம் பதிவேற்றம் செய்திருக்கிறது.

    எம்எஸ் டோனிக்கு எதிராக காஷ்மீரில் கோஷம் எழுப்பப்பட்டதாக வைரலாகும் வீடியோவில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாக தெரிகிறது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பகிர்ந்து கொள்வதால் வீண் பதற்றம் ஏற்படுவதோடு அசம்பாவிதங்களும் ஏற்படும் அபாயம் அதிகமாகும்.
    Next Story
    ×