search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் பாதித்த பகுதியில் ராகுல் காந்தி
    X
    வெள்ளம் பாதித்த பகுதியில் ராகுல் காந்தி

    கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு - வெள்ளச்சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார்

    கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. சேத பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிட்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் வடபகுதியில் 8 மாவட்டங்களில் கடந்த 8-ந் தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

    குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா, வயநாடு மாவட்டம் புதுமலா ஆகிய கிராமங்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன.

    மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா கிராமம், 35 வீடுகளுடன் 65 பேர் மட்டும் வசித்த கிராமம் ஆகும். அங்கு 8-ந் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, 60 பேர் உயிருடன் புதையுண்டு இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. 12 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் மலைபோல குவிந்துள்ளது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து காப்பாற்றப்பட்ட மக்கள்


    தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வரச்சென்ற ஒரு பெண், திரும்பி வரவே இல்லை. அதுபோல், முந்தைய நாள் வீட்டுக்கு வந்திருந்த ஒரு ராணுவ அதிகாரியையும் காணவில்லை. நேற்று காலைவரை அங்கு 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சேறுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

    காணாமல் போனவர்களின் உறவினர்களும் மீட்பு பணியில் உதவி வருகிறார்கள். சுனில் என்பவர் தன் குடும்பத்தில் 8 பேரை பறிகொடுத்துள்ளார்.

    வயநாடு மாவட்டம் புதுமலா கிராமம், தேயிலை தோட்டங்கள் நிறைந்த கிராமம் ஆகும். எண்ணற்ற வீடுகள், கட்டிடங்கள், கோவில், மசூதி ஆகியவை இருந்தன. நிலச்சரிவை தொடர்ந்து எல்லாம் தரைமட்டமாகி விட்டன.

    மழை மற்றும் நிலச்சரிவுக்கு வயநாடு மாவட்டத்தில் 10 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 19 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 14 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 5 பேர், இடுக்கி மாவட்டத்தில் 4 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 3 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 58 பேர் பலியானார்கள். நேற்று காலை மேலும் 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.

    இருப்பினும், இன்னும் ஏராளமானோரை காணவில்லை என்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    முதல்-மந்திரி பினராயி விஜயன், நேற்று உயர் அதிகாரிகளுடன் வெள்ள மீட்புப்பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மாநிலம் முழுவதும் 1,551 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 9-ந் தேதி, கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால், அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது.

    நேற்று பகல் 12 மணிக்கு மேல் கொச்சி விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதை உணர்த்தும்வகையில், அபுதாபியில் இருந்து வந்த ஒரு விமானம், முதல் விமானமாக தரை இறங்கியது.

    தெற்கு ரெயில்வே நேற்று 10 ரெயில்களை முற்றிலுமாக ரத்து செய்தது. பல்வேறு ரெயில்கள் பகுதி அளவுக்கு ரத்து செய்யப்பட்டன. 2 ரெயில்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு சென்றார். மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோழிக்கோடுக்கு அவர் வந்தார். அங்கிருந்து மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பொதுகல்லுவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்றார். அங்கு தங்கி இருப்பவர்களிடம் பேசி, பாதிப்பை கேட்டறிந்தார்.

    பின்னர், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கவலப்பரா கிராமத்துக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். மலப்புரம் மாவட்டத்தின் 3 சட்டசபை தொகுதிகள், வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் வருகின்றன. அங்கு சேத பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அவருடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் சென்றனர். இன்றும் ராகுல் காந்தி, சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

    முன்னதாக, டெல்லியில் இருந்தபோது ராகுல் காந்தி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட அறிக்கையில், அடுத்த சில நாட்களுக்கு வயநாட்டில் தங்கி இருக்கப் போவதாக கூறியுள்ளார்.
    Next Story
    ×