search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரயான்-2 விண்கலம்
    X
    சந்திரயான்-2 விண்கலம்

    பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை 4-வது முறையாக உயர்த்தப்பட்டது

    பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக 4-ம் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.

    இதன்பின்னர் அடுத்தடுத்து 2 முறை சந்திரயானின்  சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி 3-வது முறையாக சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. இதையடுத்து 71, 792 கிலோ மீட்டர் நீள் வட்டப்பாதையில் சந்திரயான்-2 செயற்கைகோள் பூமியை சுற்றியது.

    இந்த நிலையில் பூமியின் நான்காம் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலம் இன்று (ஆகஸ்ட் 2) மாலை 3.27 மணிக்கு வெற்றிகரமாக 4-ம் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இப்போது புவிக்கும் சந்திரயானுக்கும் இடையே உள்ள நீள்வட்ட சுற்றுபாதையின் குறைந்தபட்ச தூரம் 277 கிலோ மீட்டரும், அதிகபட்ச தூரம் 89,472 கிலோமீட்டரும் உள்ளது. இதற்கு அடுத்து சுற்றுவட்டபாதையில் வரும் 6-ம் தேதி நிலைநிறுத்தப்படும்” என்று பதிவிட்டுள்ளது. 
    Next Story
    ×