search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா சட்டசபை
    X
    கர்நாடகா சட்டசபை

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி - குமாரசாமி அரசு கவிழ்ந்தது

    கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிர்ப்பாக 105 வாக்குகளும் பெற்றதால் ஆட்சி கவிழந்தது.
    பெங்களூரு:

    கர்நாடகாவில் 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த முதல்-மந்திரி குமாரசாமியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

    2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் குமாரசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு அமைதியாக உள்ளனர்.

    19 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று விட்டதால் குமாரசாமி மெஜாரிட்டி பலத்தை இழந்துள்ளார். இதையடுத்து கர்நாடகாவில் 107 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. புதிய ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.

    இதற்கிடையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 15 அதிருப்தியாளர்களை சமரசம் செய்ய குமாரசாமியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

    இதற்கிடையே, சட்டசபையில் தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுவேன் என்று சவால் விட்ட முதல்-மந்திரி குமாரசாமி அதற்கான தீர்மானத்தை கடந்த 18-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது கடந்த வியாழன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமை என 3 நாட்கள் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடந்தது. நேற்று மாலை இந்த விவாதத்தை முடித்துக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ரமேஷ்குமார் திட்டமிட்டார்.

    குமாரசாமி

    ஆனால் கர்நாடக அரசியல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட 3 வழக்குகள் மீதான தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வர இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை செவ்வாய்க்கிழமை நடத்தலாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர் வலியுறுத்தினார்கள். முதலில் இதை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்க மறுத்தார். தனக்கு ஏதாவது நெருக்கடி கொடுத்தால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும் கூறினார்.

    இதைத் தொடர்ந்து சட்டசபை மீண்டும் கூடி விவாதம் நடந்தது. நேற்றிரவு 12 மணி வரை விவாதம் நடந்தது. இன்றும் விவாதம் நடைபெற்றது. 
    காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை விவாதம் நடைபெற்றது.

    அதன்பின்னர், முதல்-மந்திரி குமாரசாமி விவாதத்துக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி என உருக்கமாக பேசினார்.

    இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு 99 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகள் பதிவாகின. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
    Next Story
    ×