search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    குமாரசாமி அரசுக்கு நாளை கடைசி நாளாக அமையும் - எடியூரப்பா நம்பிக்கை

    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நாளை கடைசி நாளாக அமையும் என முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ்  கூட்டணி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்த அரசுக்கு நாளை கடைசி நாளாக அமையும் என முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

    பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளின் சட்டசபை கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு அவர்கள் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் யாருமே மதிப்பளிக்காத நிலையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தவணை வாங்கும் முயற்சிகளால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை.

    இதற்கிடையில், அரசுக்கு போதிய மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக தனிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று முதல் மந்திரி குமாரசாமியை  கவர்னர் அறிவுறுத்தியுள்ளார்.

    குமாரசாமி

    மேலும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் ’மும்பையில் தங்கியுள்ள 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று யாரும் எந்த சூழ்நிலையிலும் அவர்களை வற்புறுத்த கூடாது. 
    வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டுமா, கூடாதா? என தீர்மானிக்கும் உரிமை அவர்கள் கையில்தான் இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என்று திட்டவிட்டமாக இன்றும் தெரிவித்துள்ளனர்.

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதல் மந்திரி குமாரசாமி மற்றும் சட்டசபை சபாநாயகர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், நாளைதான் குமாரசாமி தலைமையிலான அரசின் கடைசி நாளாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    Next Story
    ×