search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய பசுமை தீர்ப்பாயம்
    X
    தேசிய பசுமை தீர்ப்பாயம்

    மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடுங்கள் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    நாடு முழுவதும் உள்ள மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 88 முக்கிய தொழிற்பேட்டைகளில் 2009-10-ம் ஆண்டில் ஆய்வு செய்தது. நிலத்தடிநீர், காற்று, அபாயகரமான கழிவுகளை வெளியேற்றுதல் ஆகியவைகளின் அடிப்படையில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என ஒவ்வொரு பகுதியையும் வகைப்படுத்தியது.

    மாசு ஏற்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளை ‘ஆபத்தான மாசடைந்த பகுதி’, ‘தீவிரமான மாசடைந்த பகுதி’, ‘இதர மாசடைந்த பகுதி’ என 3 வகையாக பிரித்தது. இந்த ஆய்வு அறிக்கையின் முடிவு பத்திரிகைகளிலும் வெளியானது.

    இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய மாசுவை மறுசீரமைக்கவும், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான மதிப்பு ஆகியவற்றை அந்தந்த தொழிற்சாலைகளில் இருந்து இழப்பீடாக வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு இதுபோன்ற தொழிற்சாலைகளை தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், ஆபத்தான மாசடைந்த பகுதி மற்றும் தீவிரமான மாசடைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

    மாசு தொழிற்சாலை

    சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற பிரிவுகளான இந்த தொழிற்பகுதிகளில் மேற்கொண்டு தொழிற்சாலைகள் அமைக்கவோ, தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவோ அனுமதிக்கக்கூடாது. அந்த பகுதி குறிப்பிட்ட அளவு மாசு குறையும் வரை அல்லது அந்த பகுதி தாங்கும் அளவுக்கு மேம்படுத்தப்படும் வரை இந்த அனுமதிகள் கூடாது.

    வெள்ளை மற்றும் பச்சை நிற அல்லது மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் இந்த உத்தரவால் பாதிக்கப்படாது. பொருளாதார வளர்ச்சி என்பது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.

    நிபுணர்களுடன் சேர்ந்து இந்த உத்தரவை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றிய பின்னர் அதுதொடர்பான தகவலை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.

    மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த சூழ்நிலையை மேம்படுத்த ஒரு செயல் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Next Story
    ×