search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மும்பை ஓட்டல்
    X
    எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மும்பை ஓட்டல்

    ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் - மும்பை ஓட்டலில் தங்கவைப்பு

    கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    மும்பை:

    கர்நாடகத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்கவில்லை.

    மேலும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர். அதன்பின், அந்த எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வாஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள்.  பின்னர் அவர்கள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றனர்.



    இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

    வரும் 12-ம் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×