search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம்
    X
    மின்சாரம்

    ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் - மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்

    ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்ற அதிரடி அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வரிசையில் ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் அமலாகிறது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டு பேசும்போது, “இணைப்பு உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். அந்த வகையில் மின் இணைப்பை உறுதி செய்வதில் ஒரே நாடு ஒரே மின்தொகுப்பு என உருவாக்க உள்ளோம். இது மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்கிறது. கியாஸ் மின்தொகுப்பு, நீர் மின் தொகுப்பு, மின்னணு பாதை, பிராந்திய விமான நிலையங்கள் குறித்த முழுமையான திட்டத்தை இந்த ஆண்டு தயாரிக்க உத்தேசித்து உள்ளேன்” என குறிப்பிட்டார்.

    வாழ்விடங்களில் எல்லா வானிலைக்கும் ஏற்ற சாலை வசதிகள் 97 சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1000 நாட்களில் நாள் ஒன்றுக்கு 130 முதல் 135 கி.மீ. வரை என்ற அளவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின்கீழ், பசுமை தொழில்நுட்பம், கழிவு பிளாஸ்டிக், குளிர்கலவை தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி 30 ஆயிரம் கி.மீ. தொலைவிலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கார்பனை குறைக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ. அளவிலான சாலைகள் தரம் உயர்த்தப்படும். இந்த திட்டம் ரூ.80 ஆயிரத்து 250 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

    நாட்டில் உள்ள 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் திறந்தவெளி கழிவறை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. 1,700 நகரங்களில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மற்றும் சமுதாய கழிவறைகள் கூகுள் வரைபடத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×