search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது அருந்துவோர்
    X
    மது அருந்துவோர்

    நாடு முழுவதும் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள்: கஞ்சா பயன்படுத்துவோர் 3.1 கோடி - மத்திய மந்திரி தகவல்

    நாடு முழுவதும் 16 கோடி பேர் மது அருந்துவதாகவும், 3.1 கோடி பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறினார்.
    புதுடெல்லி:

    நாட்டில் மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு தொடர்பாக மாநிலங்களவையில் பா.ஜனதா உறுப்பினர் ஆர்.கே.சின்கா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட்தாவர்சந்த் கெலாட்ட் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தேசிய போதை அடிமை சிகிச்சை மையம், எய்ம்ஸ் மற்றும் 10 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் 15 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.

    இந்த அமைப்புகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டவர்கள் 10 வயது முதல் 75 வயது வரையிலானவர்களை சந்தித்து ஆய்வு நடத்தினர். இதில் 186 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத்தினரை சந்தித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 4,73,569 தனிநபர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்த ஆய்வின்படி நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் மது அருந்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும் சுமார் 3.1 கோடி பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர். 77 லட்சம் பேர் பிற போதைப்பொருட்களை உபயோகித்து வருகின்றனர்.

    மது அருந்துவோரில் 5.7 கோடிக்கும் அதிகமானோர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மேலும் கஞ்சா பயன்படுத்தும் 72 லட்சம் பேர், பிற போதைப்பொருளை உபயோகிக்கும் 77 லட்சம் பேரும் அந்தந்த பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

    இதைப்போல 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள் சுமார் 1.18 கோடி பேர் போதை மாத்திரைகள் பயன்படுத்தி வருவதும், 77 லட்சம் பேர் போதை மருந்துகளை பயன்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் மது உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு தாவர்சந்த் கெலாட் கூறினார்.

    மேலும் 10 பெரிய நகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயான போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறிய தாவர்சந்த் கெலாட், இந்த அறிக்கை வருகிற நவம்பர் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்து பேசிய ஆர்.கே.சின்கா, போதை பிரச்சினைகள் கிராமப்புறங்களையும் எட்டியுள்ளதாகவும், ஏராளமான குழந்தைகளே போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறினார். எனவே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×