search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவலரின் 5 வயது சிறுவனை சந்தித்தார் அமித் ஷா
    X

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவலரின் 5 வயது சிறுவனை சந்தித்தார் அமித் ஷா

    ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவலரின் வீட்டிற்குச் சென்று, அவரது 5 வயது சிறுவனை அமித் ஷா இன்று சந்தித்தார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்னாங் மாவட்டத்தில் சிஆர்பிஎப் குழு மீது கடந்த 12ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    அர்ஷத் கான் எனும் காவலருக்கு இந்த தாக்குதலின்போது பலத்த காயம் ஏற்பட்டது. இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். மேலும் இவர் 2002ம் ஆண்டு மாநிலத்தின் காவலராக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக அவர் சதார் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருந்தார்.

    அர்ஷத், கடந்த 16ம் தேதி டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.



    இந்த இறுதிச் சடங்கின் போது அர்ஷத் கானின் மகன் உஹ்பான்(5) உடனிருந்தான். அப்போது அங்கிருந்த துணை காவலர் ஹசீப் முகல், அந்த குழந்தையை அழுதுக் கொண்டே தூக்கிச் சென்றார்.

    இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை நெகிழ வைத்தது. இந்நிலையில் அச்சிறுவனை காண இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா,  அர்ஷத் கானின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.



    அங்குச்சென்ற புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், ‘அனாந்னாங் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அர்ஷத் கான் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாரை இன்று நேரில் சந்தித்து என் இரங்கலை தெரிவித்தேன்.

    நாட்டுக்காக அவர் செய்த இந்த தியாகம், பலரின் வாழ்வை பாதுகாத்துள்ளது. நாடே, அர்ஷத் கானின் வீரத்தையும், தைரியத்தையும் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.  
    Next Story
    ×