search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு
    X

    ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு

    ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி (வயது 75), உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பாஜகவின் பாராளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சைனி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, இரங்கல் குறிப்பை வாசித்ததும், உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.



    கடந்த காலங்களில், மாநிலங்களவை உறுப்பினர் மறைந்தால் அவருக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும். ஆனால், தற்போது பாராளுமன்ற கூட்டு அமர்வில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை இன்று மாலைக்குள் முடிக்க வேண்டும் என்பதால், 3 மணி நேரம் மட்டுமே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
    Next Story
    ×