search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இளம்பெண்ணை 4 நாட்களாக கற்பழித்த 4 மாணவர்கள்
    X

    ஆந்திராவில் இளம்பெண்ணை 4 நாட்களாக கற்பழித்த 4 மாணவர்கள்

    ஆந்திராவில் காதலனை தேடி சென்ற இளம்பெண்ணை 4 நாட்களாக அறையில் அடைத்து வைத்து கற்பழித்த 4 மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நகரி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அம்பி ஷெட்டி ராமு. டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், குண்டூரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    கடந்த 15-ந்தேதி இளம்பெண் தனது காதலருடன் பேசிக் கொண்டிருந்தார். இதை இளம்பெண்ணின் பெற்றோர் கண்டித்தனர்.

    இதுபற்றி தனது காதலரிடம் இளம்பெண் தெரிவித்தார். உடனே காதலன் ராமு, “நீ ஓங்கோல் வந்து விடு. இருவரும் சேர்ந்து வாழலாம். ஓங்கோல் பஸ் நிலையத்தில் காத்திரு. நான் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என கூறினார்.

    இதை நம்பிய இளம்பெண் கடந்த 16-ந்தேதி ஓங்கோல் சென்று பஸ் நிலையத்தில் காத்திருந்தார். ஆனால் காதலன் வரவில்லை.

    அந்த இளம்பெண்ணிடம் செல்போன் இல்லை. எனவே அருகில் இருந்த ஒரு செல்போன் கடைக்கு சென்று அந்த கடையில் இருந்த ஷேக்பாஜி என்பவரிடம், தனக்கு போன் பேச உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாள். இரண்டு கைகளும் ஊனமுற்ற அவர், இளம்பெண் சொன்ன நம்பருக்கு போன் செய்ததாகவும் யாரும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    நேரம் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் காதலன் வரவில்லை. இரவு 11 மணி ஆகியும் யாரும் இளம்பெண்ணை தேடி வரவில்லை.

    எனவே ஷேக்பாஜி அவளை பாதுகாப்பு கருதி கடைக்குள் வந்து இருக்கச் சொன்னார். நேரம் அதிகம் ஆனதால் இளம்பெண் அந்த கடைக்குள் போய் உட்கார்ந்தாள்.

    அப்போது அவளிடம் நைசாக பேசிய ஷேக்பாஜி, இளம்பெண் தனது காதலனை தேடி வந்து இருப்பதையும் அவரை காணாமல் தவிப்பதையும் தெரிந்து கொண்டார். பின்னர் இரவு அந்த பெண்ணை அருகில் உள்ள மருந்து கடை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

    உணவு கொடுத்த ஷேக்பாஜி, சிறிது நேரம் இளம் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த் ரெட்டி, மகேஷ் ஆகியாரை அழைத்து வந்தார். இளம் வயது மாணவன் ஒருவனும் இவர்களுடன் சேர்ந்து கற்பழித்தான்.

    4 நாட்கள் அந்த இளம் பெண்ணை தங்க வைத்தனர். அப்போது மேலும் 3 மாணவர்கள் வந்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர்.

    இளம்பெண் தங்கி இருந்த 4 நாளில் செல்போன் கடைக்காரர் உள்பட 7 பேர் மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

    5-வது நாள் அதிகாலை அந்த பெண் தங்கியிருந்த அறையில் இருந்து தப்பி வந்தாள். உடல் தள்ளாடிய நிலையில் சோகமாக அழுது கொண்டிருந்த அவளை ஊர் காவல் படையைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவர் சந்தித்தார். அப்போது, இளம்பெண் 4 நாட்களாக தான் அனுபவித்த வேதனையை அவரிடம் சொல்லி கதறி அழுதார்.

    இதையடுத்து அந்த இளம்பெண் “சக்தி டீம்” என்ற பொதுநல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். ஓங்கோல் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து இளம் பெண்ணை கற்பழித்த ஷேக்பாஜி, அவருடைய நண்பர்கள் ஸ்ரீதர், மகேஷ், மற்றும் 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த போலீசாரையும், இந்த நடவடிக்கை எடுக்க உதவிய ஊர் காவல் படைவீரர் வெங்கடேஸ்வரலு, சக்தி டீம் அமைப்பினர் ஆகியோரை போலீஸ் டி.ஜி.பி. கவுதம் சவாங் பாராட்டினார்.

    இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓங்கோல் சென்று மகள் நிலையை அறிந்து கண்ணீர் விட்டு கதறினார்கள். அவர்களிடம் இளம்பெண் ஒப்படைக்கப்பட்டாள்.

    பின்னர் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்த அவர்கள், “எங்கள் மகள் வாழ்க்கையை சீரழித்தவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி கூறிய ஆந்திர மந்திரி சுஜாதா, “குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து கைது செய்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
    Next Story
    ×