search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானில் சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் முடிவு
    X

    ஈரானில் சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் முடிவு

    ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சர்ச்சைக்குரிய வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் இன்று தீர்மானித்துள்ளன.
    புதுடெல்லி:

    ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது.

    சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.
     
    இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

    தென்கிழக்கில் ஓமன் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற்பரப்பின் அருகாமையில் இந்த ஹோர்மஸ்கான் பிராந்தியம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமன் நாட்டின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன.

    அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்த பின்னர் இந்த பகுதிக்கு உட்பட்ட வான்வெளி வழியாக வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் மாற்றுப்பாதை வழியாகதான் வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றன.


    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துடன்  நம் நாட்டில் உள்ள விமானச் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

    இந்த ஆலோசனைக்கு பின்னர் ‘பயணிகளின் பாதுகாப்பு கருதி ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளை தவிர்த்துவிட்டு மாற்றுப் பாதையில் இந்திய விமானங்கள் இயக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    Next Story
    ×