search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 43 குழந்தைகள் பலி - மத்திய நிபுணர் குழு முகாம்
    X

    பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 43 குழந்தைகள் பலி - மத்திய நிபுணர் குழு முகாம்

    பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது.

    இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை வரை 41 குழந்தைகள் பலியாகி இருந்தனர். அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    நோய் பாதிக்கப்பட்டு 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

    ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

    குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×