search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு - சந்திரசேகரராவ் அறிவிப்பு
    X

    சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு - சந்திரசேகரராவ் அறிவிப்பு

    தெலுங்கானாவில் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.
    ஜதராபாத்:

    தெலுங்கானாவில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது.

    அங்கு மொத்தம் உள்ள 32 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலில் அத்தனை இடங்களையும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியே கைப்பற்றி இருந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து தலைவர் துணைத் தலைவர்களுடன் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை சந்திரசேகரராவ் கூறினார். அவர் பேசியதாவது:-

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் அனைவரும் பஞ்சாயத்து ராஜ் சட்ட விதிகள் பற்றி சரியாக தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

    மாவட்ட பஞ்சாயத்தின் செயல்பாடுகள், கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மாவட்ட பஞ்சாயத்தும், கூட்டுறவு அமைப்புகளும் கிராமங்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். இந்த இலக்கை முதலில் அடையும் மாவட்ட பஞ்சாயத்துக்கு முதல்-மந்திரியின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.



    கடந்த காலங்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு முக்கியமான எந்த வேலையும் இருக்காது. நான் சமீபத்தில் மத்திய நிதி ஆணையத்துக்கு சென்ற போது அவர்களின் செயல்பாடுகளை எடுத்துரைத்தேன். அதைக்கேட்ட ஆணைய அதிகாரிகள் தேவையான நிதி உதவிகளை செய்வதாக கூறினார்கள்.

    விரைவில் ஐதராபாத்தில் மாவட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கிராமமும் முன்மாதிரி கிராமங்களாக மாற்றப்பட வேண்டும். கிராம பஞ்சாயத்து அளவில் செயலாளர்கள் நியமித்துள்ளோம். பஞ்சாயத்து ராஜ் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×