search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு நெருக்கடி
    X

    3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு நெருக்கடி

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலியாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அக்கட்சி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    ஆனால், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒன்றில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

    இந்த தோல்வியால் ராஜஸ்தான் காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்று அமைச்சர்கள் உதய்லால், ரமேஷ் மீனா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முதல்வர் அசோக் கெலாட் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக உட்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவல்களை காங்கிரஸ் தலைமை மறுக்கவில்லை. 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 112 இடங்களில் வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநிலத்தில் உள்ள 29 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. இதனால் மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தோல்வி காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் மந்திரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதை தடுக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் அக்கட்சிக்கு 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களும், ஒரு சமாஜ்வாடி எம்.எல்.ஏ. மற்றும் 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

    பா.ஜனதா 109 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. கடந்த வாரம் மத்திய பிரதேச கவர்னருக்கு பா.ஜனதா எழுதிய கடிதத்தில், கமல்நாத் அரசு பலத்தை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 11 பாராளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×