search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    X

    மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    ராஜீவ் காந்தி குறித்த மோடியின் விமர்சனத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. #Modi #AmitShah #SushmitaDev
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நம்பர் ஒன் ஊழல்வாதியாக மரணம் அடைந்தார்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. ராகுல்காந்தியும் பதிலடி கொடுத்து இருந்தார்.

    இந்த நிலையில் ராஜீவ் காந்தி குறித்த மோடியின் விமர்சனத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    அவரது மனுவில், ‘பிரதமர் பதவி போன்ற உயரிய பொறுப்பில் இருந்து கொண்டு, ராஜீவ்காந்தி குறித்து தரக்குறைவான, அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

    இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது,  மோடி மற்றும் அமித் ஷா மீதான புகார்கள் குறித்து எடுத்த நடவடிக்கை குறித்த நகலுடன், கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுஷ்மிதா தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  ஆஜராகி வாதாடினார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான புகார்களை முழுமையாக விசாரிக்காமல், அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என அவர் கூறினார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.



    ஆனால், மோடி மற்றும் அமித் ஷா மீதான 11 புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துவிட்டதாகவும், அந்த உத்தரவு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி குறிப்பிட்டார்.

    இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததும், நடத்தை விதிமீறல் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துவிட்டதால், புதிய வழக்கு தேவையில்லை எனக் கூறி சுஷ்மிதா தேவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Modi #AmitShah #SushmitaDev

    Next Story
    ×