search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க சந்திரசேகர ராவ் தீவிர முயற்சி
    X

    பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க சந்திரசேகர ராவ் தீவிர முயற்சி

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு மாற்றாக 3-வது அணி அமைப்பதில் தீவிரமாக இருக்கும் சந்திரசேகர ராவ், வருகிற 26-ந் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டு முக்கிய தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். #ChandrasekharRao
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜனதா அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இதற்காக வருகிற 26-ந் தேதி டெல்லி செல்லும் சந்திரசேகர ராவ், அங்கு 2 அல்லது 3 நாட்கள் முகாமிட்டு, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. #ChandrasekharRao

    Next Story
    ×