search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் ஊழலால், காங்கிரஸ் தான் மக்களை தூங்க விடாமல் செய்தது - ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி
    X

    தொடர் ஊழலால், காங்கிரஸ் தான் மக்களை தூங்க விடாமல் செய்தது - ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி

    60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்த ஊழல்களால் மக்கள்தான் தூங்க முடியாமல் தவித்தனர் என்று ராகுல் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. #BJP #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருகிறார். இந்தியாவில் ஒரு பிரதமரை மிக, மிக மோசமாக விமர்சிப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் தடவையாகும். தரம் தாழ்ந்து விட்ட ராகுலிடம் இருந்து பக்குவமான நிலையை எதிர்பார்க்க முடியாது.

    பிரதமர் மோடியை தூங்க விடமாட்டேன் என்று இப்போது ராகுல் சொல்கிறார். இதற்கு முன்பு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன நடந்தது என்பது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

    60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை, எத்தனை ஊழல்கள் நடந்தன. தொடர்ச்சியாக நடந்த ஊழல்களால் மக்கள்தான் தூங்க முடியாமல் தவித்தனர். இது ராகுலுக்கு தெரியுமா?

    தொடர் ஊழல் பற்றி தெரியாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டு அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ரபேல் போர் விமானம் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து விட்டதாக ராகுல் அடிக்கடி சொல்கிறார். ஒப்பந்தம் கை மாறியதால்தான் அவர் இப்படி பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்.

    இதுபற்றி பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் எங்களிடம் நேரில் பேசும் தைரியம் ராகுலுக்கு இல்லை.

    இதனால் ராகுல் விவாதிக்க வராமல் ஓடி ஒளிகிறார். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி நழுவுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #RahulGandhi #PMModi
    Next Story
    ×