search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்
    X

    தெலுங்கானா முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்

    தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர  ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடங்கியது. புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக பதவியை ராஜினாமா செய்தார் சந்திரசேகர ராவ். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள டிஆர்எஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து புதிய அரசு பதவியேற்பதற்கான நடைமுறைகள் தொடங்கின. ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அப்பகுதியில் ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



    இந்நிலையில், இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ். அவருக்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். #TelanganaElections #ChandrashekharRao
    Next Story
    ×