search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.யின் கீழ் எப்போது வரும்? - அருண் ஜெட்லி விளக்கம்
    X

    பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.யின் கீழ் எப்போது வரும்? - அருண் ஜெட்லி விளக்கம்

    பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி நேற்று விளக்கம் அளித்தார். #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மிகப்பெரும் வரி சீர்திருத்த நடவடிக்கையாக, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி.யை மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது. இதன் மூலம் உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட சுமார் 17 மறைமுக வரிகளும், மேலும் சில வரிகளும் ஜி.எஸ்.டி. என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

    நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை அமல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த வரி முறையில், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிகள் விதிக்கப்பட்டன. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் என அனைத்தும் இந்த வரி அடுக்குகளின் கீழ் கொண்டு வரப்பட்டன.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மைல்கல் திட்டங்களில் ஒன்றான இந்த ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லியில் நேற்று சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. நிதி இலாகாவை கூடுதலாக கவனித்து வரும் ரெயில்வே மந்திரி பியூஷல் கோயல் தலைமையில் நடந்த விழாவில், நிதி மந்திரி அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் பேசினார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அருண் ஜெட்லி, முதல் முறையாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகும். விழாவில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

    பல நாடுகளில் ஜி.எஸ்.டி. அமல்படுத்திய போது மிகப்பெரும் சீர்குலைவை சந்தித்ததை காண முடிந்தது. அதன்படி இந்திய பொருளாதாரத்திலும் ஜி.எஸ்.டி.யால் சீர்குலைவு ஏற்படும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால் இந்த ஓராண்டு அனுபவத்துக்குப்பின், சீர்குலைவு என்ற வார்த்தையை கூட ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தில் பயன்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    ஜி.எஸ்.டி.யால் இந்த ஓராண்டில் நாம் பெற்றிருக்கும் பயன்கள் வெறும் குறுகிய கால அல்லது சிறப்பான நடுத்தர கால விளைவுகள்தான். ஏனெனில் ஜி.எஸ்.டி.யின் சிறந்த பலன்கள் இன்னும் வரவில்லை. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, எளிமையான வியாபாரம், தொழில் மற்றும் வர்த்தக துறை விரிவாக்கம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்கள் மற்றும் நேர்மையான வர்த்தக நடைமுறைகளில் ஜி.எஸ்.டி. நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

    கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதற்கு பிந்தைய 9 மாதங்களில் ரூ.8.2 லட்சம் கோடி வரிவசூல் செய்யப்பட்டு உள்ளது. இது ஓராண்டுக்கு என்றால் ரூ.11 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது மறைமுக வரிவசூலில் 11.9 சதவீதம் அதிகமாகும்.

    தற்போதைய ஜி.எஸ்.டி. அடுக்குகளை குறைப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்ந்து உழைத்து வருகிறது. ஜி.எஸ்.டி. செயலாக்கம் சீராகி, வரி ஏய்ப்புகளை குறைப்பதன் மூலம் வரி வசூல் அதிகமானதும் விரும்புகிற குறைப்பு நடைமுறைக்கு வரும்.

    எனது கணிப்புப்படி, எண்ணெய் சாரா துறையில் மறைமுக வரிவசூலில் 1.5 சதவீதம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே வரி அடுக்குகளை உடனடியாக குறைக்கும். எனவே வரி வசூல் நிலவரம் சீரானவுடன் ஜி.எஸ்.டி.யின் வரி அடுக்கு களை இன்னும் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    நேரடி வரி வசூல் அதிகரிப்புக்கு ஜி.எஸ்.டி. பெரிதும் உதவி இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. ஏராளமான மக்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் வேகமாக தங்கள் வருவாயை வெளியிடுகின்றனர். இதன் மூலம் வரி வருவாயும் கணிசமாக அதிகரிக்கும்.

    பல்வேறு நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே அடுக்கு ஜி.எஸ்.டி. வரியே விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறுவது, தவறான யோசனை. ஒட்டுமொத்த மக்களும் ஒரே சீரான மற்றும் அதிக வரி செலுத்தும் திறன் கொண்டவர்களாக இருக்கும் நாடுகளில் மட்டுமே இது சாத்தியமானது. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளுக்கு இந்த யோசனை பலனளிக்காது. எனவே இதை ஏற்க முடியாது.

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என ராகுல் காந்தியும், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி மந்திரிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    எனவே இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பெட்ரோலிய பொருட்களும் ஜி.எஸ்.டி.க்கு கீழே கொண்டுவரப்படும். இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து நான் மேற்கொள்வேன். மாநிலங்கள் தங்கள் வருவாய் நிலையில் வலுவான நிலையை எட்டியதும், பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்குப்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி.யால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றம் தணிந்து விட்டது. ஜி.எஸ்.டி. மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட மேலாக அதாவது ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. மிகப்பெரும் வெற்றியடைந்து இருப்பதுடன், பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய வழியில் உதவி புரியும்’ என்றார்.

    வருமான வரி போன்ற நேரடி வரி வசூலை அதிகரிக்க ஜி.எஸ்.டி. உதவுவதாக கூறிய பியூஷ் கோயல், கடந்த சில மாதங்களில் இது 44 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். வரி நடைமுறை எளிமையாக்கப்பட்டு இருப்பதாகவும், ஏராளமான மக்கள் இந்த வரித்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.  #ArunJaitley #GST #Tamilnews 
    Next Story
    ×