search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைவார் - எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்
    X

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைவார் - எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
     
    இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஒரு சில நாட்களில் வாஜ்பாய் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார். #AIIMS #AtalBihariVajpayee
    Next Story
    ×