search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    X

    எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    கர்நாடகா முதல்வராக இன்று எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் நேற்று முன்தினம் வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது.  

    இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

    இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு காங்கிரசின் மனுவை விசாரித்தது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

    அப்போது ஆளுநர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநர் உத்தரவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார். 

    காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி, பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். 

    சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

    அதன்பின் பா.ஜ.க. தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான காங்கிரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆளுநரை அவரது பணியை செய்யவிடுங்கள், நீதிமன்றம் அவருடைய வேலைகளில் தலையிட வேண்டாம். ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால், எந்த சட்டமும் இயற்றப்படாது. குடியரசு தலைவரும், ஆளுநரும் எந்த நீதிமன்றத்திலும் பதில் சொல்ல தேவையில்லை, என கூறினார்.

    இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #KarnatakaElection #KarnatakaCMRace #Yeddyurappa
    Next Story
    ×