search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் வினோதம் - தகன மேடை அமைத்து அரசு ஊழியர் தற்கொலை
    X

    கேரளாவில் வினோதம் - தகன மேடை அமைத்து அரசு ஊழியர் தற்கொலை

    கேரளாவில் அரசு ஊழியர் தனக்குத்தானே தகன மேடை அமைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா பகுதியை சேர்ந்தவர் பிரகாசன் (வயது 65). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி கீதா (55). இவர்களது மூத்த மகளை அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். மனைவி மற்றும் 2-வது மகள் பிரியா ஆகியோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மனைவியின் தங்கை மீராவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றார். திருமணம் முடிந்ததும் நேற்று காலை 3 பேரும் வீட்டுக்கு வந்தனர். மனைவி மற்றும் மகள் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.

    தனியே இருந்த பிரகாசன் வீட்டுக்கு பின்புறம் பெரிய குழியை வெட்டினார். பாதி அளவுக்கு விறகுகளை அடுக்கி அதில் மண்எண்ணை ஊற்றினார். தற்போது அந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.மழை பெய்தால் தீ அணையாமல் இருக்க சிமெண்ட் ஷீட்டால் மேற்கூரை அமைத்தார்.

    பின்னர் குழிக்குள் படுத்துக்கொண்டு விறகுகளை தனது உடல்மேல் அடுக்கினார். முழுவதும் அடுக்கிய பின்னர் தீ வைத்தார். தீ மளமளவென பற்றி எரிந்தது.

    பக்கத்தில் வீடுகள் இல்லாததால் புகை வருவதை பார்த்த பொதுமக்கள் பிரகாசன் குப்பைகளுக்கு தீ வைத்திருப்பார் என்று நினைத்தனர். மாலை பிரகாசனின் சகோதரர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரகாசனை காணவில்லை. சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு பின்புறம் சென்று பார்த்தார்.

    அப்போது தகனமேடை போன்று அமைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அருகில் சென்று பார்த்தபோது பிரகாசனின் கால்களை தவிர மற்ற பகுதிகள் எரிந்து சாம்பலானது தெரியவந்தது. தனது சகோதரரின் கால்களை தெரிந்த அவர் அலறி சத்தம்போட்டார்.

    இது குறித்து அவரது மனைவி, மகள் மற்றும் மாலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாம்பல் மற்றும் எரியாத 2 கால்களையும் போலீசார் மீட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு எந்த வித நோயும் இல்லை. பொருளாதாரத்திலும் குறைவு இல்லை என்பது தெரியவந்தது.

    மேலும் அவரது நண்பர்கள் கூறும்போது, பிரகாசன் பழக இனிமையானவர். ஆனால் சமீபகாலமாக என்ன வாழ்க்கை இது? இன்னும் எவ்வளவு நாள் தான் வாழவேண்டும்? என்று வாழ்க்கை குறித்து சலிப்புடன் பேசினார் என்று கூறினர். 2 நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் கலகலப்பாக பேசிய பிரகாசன் தற்கொலை செய்து கொண்டதை மனம் நம்ப மறுக்கிறது என்று உறவினர்கள் கூறினர்.

    மாலா போலீசார் பிரகாசனின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×