search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு கூடுதலாக சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா
    X

    சசிகலாவுக்கு கூடுதலாக சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா

    பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.
    பெங்களூரு:

    சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகள் குறித்து டி.ஐ.ஜி. ரூபா அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    சசிகலா சிறையில் இல்லாமல் சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து நான் விசாரித்தேன். அதை நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால் என் கண்ணில் அவர் மாட்டவில்லை. அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால் நான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும்.



    சசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐ போன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அவரிடம் சோதனை நடத்தி என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளியில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார். அந்த பணிகள் இன்னும் நிற்கவில்லை.

    தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்ட தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் பிரகாஷ் என்பவர் அவரை சந்தித்துள்ளதாக எனக்கு நம்பிக்கையான தகவல் கிடைத்தது.

    சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கும் மற்ற கைதிகளுக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறப்பு வசதிகள் குறித்து 2 அறிக்கைகளை டி.ஐ.ஜி. ரூபா கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் போலீஸ் டிஜி.பி. தத்தா, உள்துறை அதிகரிகளுக்கு அனுப்பி இருந்தார்.

    அதில் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 அறைகள், அதில் செய்யப்பட்டிருந்த வசதிகள், ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கூறி இருந்தார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்ட விவரங்களும் சசிகலா தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமி‌ஷனராக நியமிக்கப்பட்ட பிறகு ரூபா சிறைத்துறை விவகாரங்கள் குறித்து பேசுவது கிடையாது.

    Next Story
    ×