search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் தடவையாக டிரம்ப்பை சந்திக்க இருக்கும் மோடி: என்ன பேச இருக்கிறார்கள்?
    X

    முதல் தடவையாக டிரம்ப்பை சந்திக்க இருக்கும் மோடி: என்ன பேச இருக்கிறார்கள்?

    3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஈர்க்கவும், நல்லுறவை மேம்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று வருகிறார்.

    அந்த வகையில் அவர் போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 4 நாள் அரசு முறை பயணம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் முதலில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு செல்கிறார்.



    அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசுகிறார். சமீபத்தில் கோஸ்டாவுடன் மோடி சில முக்கிய திட்டங்கள் குறித்து பேசி இருந்தார்.

    அந்த திட்டங்கள் தொடர்பாக மோடி சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    போர்ச்சுக்கல் சுற்றுப் பயணம் முடிந்ததும் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு செல்வார். ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 26-ந்தேதி அவர் வாஷிங் டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார்.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி தற்போதுதான் முதன் முதலாக அவரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய வி‌ஷயங்கள் குறித்து டிரம்ப்புடன் விவாதிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    குறிப்பாக எச்.1பி விசா மற்றும் பாகிஸ்தானின் தீவிரவாத போக்கு ஆகியவை பற்றி டிரம்ப்புடன் மோடி விவாதித்து ஆலோசனை நடத்துவார். இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கு சாதகமான அம்சத்தை அமெரிக்கா மேற்கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்துவார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவிடம் மோடி வலியுறுத்துவார் என்பதால் திங்கட்கிழமை அவர்களுக்கு இடையே நடக்கும் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக நேற்று அவர் சமூக வலை தளத்தில் ஒரு தகவல் வெளியிட்டார்.

    அதில் அவர், “டிரம்ப்புடன் சமீபத்தில் போனில் பேசினேன். எங்கள் உரையாடல் இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது. 26-ந்தேதி அவருடனான சந்திப்பு இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தும். அதற்கு ஏற்ப நான் அவருடன் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.



    ஜனாதிபதி டிரம்ப் சந்திப்புக்கு பிறகு சில அமெரிக்க அமைச்சர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள் ளார். மேலும் அமெரிக்க தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்து இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கவுள்ளார்.

    இவை தவிர அமெரிக்க வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். 26-ந்தேதி அமெரிக்கா சுற்றுப்பயணம் முடிந்ததும் அவர் நெதர் லாந்து நாட்டுக்கு செல்ல உள்ளார்.

    27-ந்தேதி நெதர்லாந்து நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க இருக்கிறார். முதலில் அவர் நெதர்லாந்து நாட்டு பிரதமர் மார்க் ரூட்டியை சந்திக்க உள்ளார். அப்போது இந்தியா - நெதர்லாந்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

    பிறகு நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர், அரசி மேக்சிமா ஆகியோரை மோடி சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவும் நெதர் லாந்தும் தூதரக உறவை ஏற்படுத்தி 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

    இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேசவுள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நெதர்லாந்துடன் சில முக்கிய ஒப்பந்தங்களை இந்தியா செய்யவுள்ளது. இதையடுத்து 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 28-ந்தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.
    Next Story
    ×