search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு எதிராக அம்பேத்கரின் பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை
    X

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு எதிராக அம்பேத்கரின் பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு எதிராக டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் யஷ்வந்த்தை நிறுத்த எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
    புதுடெல்லி:

    அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுவார் என்று நேற்று முன்தினம் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு அதிரடியாக அறிவித்தது.

    ஒருபக்கம் பொதுவேட்பாளரை ஒருமித்த கருத்துடன் நிறுத்தலாம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துவிட்டது.

    தலித் என்பதால் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப் போவதாக பெரும்பாலான மாநில கட்சிகள் கூறி இருப்பதால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை எதிர்க்கட்சிகள் சார்பில் வலுவானதொரு வேட்பாளரை நிறுத்தவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளன.

    குறிப்பாக, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதாதளம்) பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பதாக கூறி இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதேபோல் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்) தேசிய ஜனநாயக கூட்டணியின் பக்கம் சாயலாம் என்கிற நிலையும் காணப்படுகிறது.

    பா.ஜனதா தனது வேட்பாளரை அறிவித்த உடனேயே, நேற்று முன்தினம் மாலையில் இருந்தே எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளரை நிறுத்துவதற்கான அவசர ஆலோசனையில் ஈடுபடத்தொடங்கி விட்டன.



    இது தொடர்பாக காங்கிரஸ், இடது சாரி கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் பல முறை கலந்து ஆலோசித்தனர்.

    அப்போது பா.ஜனதா கூட்டணி எளிதில் வெற்றி பெறவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். மேலும், ராம்நாத் கோவிந்துக்கு சரியான போட்டியாக சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் யஷ்வந்த், சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்) காங்கிரசின் 2 முக்கிய தலைவர்களான சுசில்குமார் ஷிண்டே, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

    சிறந்த தலித் வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜனதாவின் தலித் வேட்பாளரை விட எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை பகுஜன் சமாஜ் ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறி இருப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    அம்பேத்கரின் பேரன் என்பதால் பிரகாஷ் யஷ்வந்த் அல்லது அனைவருக்கும் நன்கு அறிமுகமான சரத்யாதவை நிறுத்தினால் போட்டியை கடுமையாக்கலாம் என்று இடது சாரி கட்சிகள் கூறுகின்றன.

    அதேநேரம் முன்னாள் மத்திய உள்துறை மந்திரியும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான சுசில்குமார் ஷிண்டேவை நிறுத்துவதற்கு காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கிறது.

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், “22-ந்தேதி (நாளை) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூடி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும். அதுவரை தனிப்பட்ட எந்த ஒருவருடைய பெயர் குறித்தும் கூறுவது சரியாக இருக்காது” என்றார். 
    Next Story
    ×