search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    70 கிலோ வரை சுமைகளை தாங்கி பின்தொடரும் ரோபோ: உ.பி. மாணவனின் சாதனை
    X

    70 கிலோ வரை சுமைகளை தாங்கி பின்தொடரும் ரோபோ: உ.பி. மாணவனின் சாதனை

    உ.பி.யை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் 70 கிலோ வரையிலான பொருட்களை சுமந்துச் செல்லும் ’அதிநவீன ரோபோ’ ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
    லக்னோ:

    அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகையிலான கண்டுபிடிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘மேக்கர்ஸ் ஃபெஸ்ட்’ என்ற பெயரில் அறிவியல் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் ’மேக்கர்ஸ் ஃபெஸ்ட்’ விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுகான மூன்று நாள் ’மேக்கர் ஃபெஸ்ட்’ விழா குஜராத் மாநில தலைநகரான அகமதாபத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

    இந்த விழாவில் உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்த யாஷ் பன்சால்(17) என்ற 12-ம் வகுப்பு மாணவர், 70 கிலோ வரையிலான சுமைகளை கொண்டுச் செல்லக்கூடிய நவீனவகை ரோபோவை உருவாக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.



    இதற்கு முன்னதாக இம்மாணவர், 7 கிலோ எடையிலான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய சிறிய ரோபோவை உருவாக்கி இருந்தார். அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களை சேர்த்து தற்போது, 70 கிலோ வரையில் பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் இந்த புதிய ரோபோவை உருமாற்றியுள்ளார்.

    இந்த ரோபோவை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த யாஷ் பன்சால், ‘முன்னர் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உறவினர் ஏகப்பட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தார். அவற்றை எங்கள் வீட்டுக்குள் கொண்டு செல்ல நான் உதவி செய்ய வேண்டியதாக இருந்தது. அவருக்கு உதவிய பின்னர் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்.

    எனவே, பிறருக்கு சோர்வு ஏற்படாத வகையில் சுமைகளை சுமந்து செல்ல ஒரு ரோபோவை உருவாக்கினால் என்ன? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அந்த கேள்விக்கான பதில்தான் இந்த நவீன சுமைதூக்கி ரோபோ’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்த ரோபோவை வைத்திருக்கும் உரிமையாளரின் ஆடைகளில் உள்ள பிரத்யேக குறியீட்டை பின்தொடர்ந்து அவரது பின்னால் இந்த ரோபோ செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    இந்த கண்டுபிடிப்பின் மூலமாக, அளவுக்கதிகமான புத்தகச் சுமையால் தடுமாறியபடி நடந்து செல்லும் மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பொருட்களை எடுத்துச் செல்லலாம் எனவும் பன்சால் கூறினார்.
    Next Story
    ×