search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.500, 1000 ஒழிப்பு: சுப்ரீம் கோர்ட் விசாரணை டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    ரூ.500, 1000 ஒழிப்பு: சுப்ரீம் கோர்ட் விசாரணை டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுவின்மீதான விசாரணை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதுவரை 14 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

    அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று முதல் புதிய ரூ.500 நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு சார்பில் 27 பக்க பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:-

    கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது. கருப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பினாமி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    70 ஆண்டுகளாக கருப்பு பணம் குவிக்கப்பட்டு வருகிறது. அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் புழக்கத்தில் இருந்த ரூ.14 லட்சம் கோடி பணம் வெளியே வந்துள்ளது. அவை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் ரூ.500 கோடி கள்ளநோட்டுகளும் வீணாகி விட்டன. கள்ளநோட்டுகளை தீவிரவாதிகளும் தேசவிரோத சக்திகளும் பயன்படுத்தி வந்தனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் வீணாகி விட்டன.

    தீவிரவாதிகளிடம் தாராளமாக கள்ள நோட்டுகள் நடமாடுகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தாலும் மனித உயிர்கள் பலியாகிறது. தாராள பண புழக்கத்தால்தான் மனித உயிர்கள் பலியாகும் பேரழிவு ஏற்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான
    அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி, அரசின் நிலைப்பாடு என்ன என்பதை நேற்று பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    இதற்கு, மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருமனுதாரரின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கையில் பணம் கிடைக்காமல் மக்கள் வீதிகளில் திண்டாடி வருகிறார்கள், இந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளப் போகிறீர்கள்? என முகுல் ரோஹட்கியிடம் கேள்வி எழுப்பினார்.

    மற்றொரு மனுதாரரும் வழக்கறிஞருமான மனோகர் லால் சர்மா, இந்த நடவடிக்கையால் எந்த அரசியல்வாதியும் பாதிக்கப்படவில்லை, அவதிப்படுபவர்கள் எல்லாம் பொதுமக்கள்தான் என்று குற்றம்சாட்டினார்.

    இவற்றை எல்லாம் குறிப்பெடுத்துகொண்ட நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×