search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் உப்பு தட்டுப்பாடு வதந்தி: குடோன்கள், மளிகைக்கடைகளில் அதிகாரிகள் சோதனை
    X

    திருப்பதியில் உப்பு தட்டுப்பாடு வதந்தி: குடோன்கள், மளிகைக்கடைகளில் அதிகாரிகள் சோதனை

    திருப்பதியில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், தாசில்தார்கள், போலீசார் குடோன்கள் மற்றும் மளிகைக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    திருப்பதி:

    வடமாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. சித்தூர் மற்றும் திருப்பதி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மளிகைக்கடைகளில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் பரவியது.

    திருப்பதியில் பல மளிகைக்கடைகளில் கிலோ ரூ.12 வீதம் பொதுமக்கள் 5-லிருந்து 10 கிலோ வரை உப்பு வாங்கி சென்றனர். சில இடங்களில் 25 கிலோ உப்பு மூட்டை ரூ.180-லிருந்து ரூ.300 வரை விற்கப்படுகிறது. சில சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு மணி நேரத்தில் 250 கிலோ சால்ட் உப்பு பாக்கெட்டுகள் விற்பனையாவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், தாசில்தார்கள், போலீசார் திருப்பதியில் உள்ள பல்வேறு குடோன்கள், மளிகைக்கடைகளுக்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி சத்தியநாராயணபுரம், ஜீவகோணா, மதுராநகர், அன்னமயநகர் ஆகிய பகுதிகளில் வசிப்போர் 5 கிலோவில் இருந்து 10 கிலோ வரை உப்பு வாங்கி வீடுகளில் இருப்பு வைத்துக் கொண்டனர். மேலும் மாவட்டத்தில் சித்தூர், தம்பலப்பள்ளி, மதனப்பள்ளி, புங்கனூர், பீளேர் ஆகிய பகுதிகளிலும் 10 கிலோவில் இருந்து 20 கிலோவரை உப்பு வாங்கி செல்கின்றனர். மளிகைக்கடைகளில் இரவு 8 மணிக்குமேல் அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு உப்பு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிகிருஷ்ணா ஆகியோர் கூறியதாவது:-

    வடமாநிலங்களில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. அதேபோல் ஆந்திராவில் யாரோ புரளியை ஏற்படுத்தி விட்டனர். அந்தப் புரளி திருப்பதியிலும் பரவி வருகிறது. ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இருந்து நெல்லூர் மாவட்டம் வரை விசாலமான நீண்ட கடற்கரை உள்ளது. அதில் உற்பத்தி செய்யப்படும் உப்பு போதுமானதாக உள்ளது.

    எனவே, ஆந்திராவில் உப்பு தட்டுப்பாடு இருக்காது. எதற்காக அதிக பணம் கொடுத்து உப்பை வாங்குகிறீர்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மளிகைக்கடைகளில் அதிக விலைக்கு உப்பு விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உப்பு விற்பனையாளர்கள் தனிக் கவுண்ட்டர்கள் தொடங்கி உப்பை விற்பனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருப்பதி வணிகர் சங்க தலைவர் மஞ்சுநாத் கூறுகையில், திருப்பதி மக்களுக்குப் போதுமான உப்பு இருப்பு உள்ளது. யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார். அதைத்தொடர்ந்து திருப்பதி பைராகிப்பட்டிடையில் ஒரு மொத்த விற்பனை குடோனில் உப்பு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என திருப்பதி கிழக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர், வணிகர் சங்க தலைவர் மஞ்சுநாத், சங்க நிர்வாகிகள் மதுசூதன்ராவ், சவுத்திரி, வாசு மற்றும் தாசில்தார் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் சத்தியநாராயணபுரம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் கூடுதல் விலைக்கு உப்பு விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அலிபிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். கூடுதல் விலைக்கு உப்பு விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×