search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் ராணுவ வீரர் உடலை பார்க்க சென்ற ராகுல் காந்தி கைது
    X

    முன்னாள் ராணுவ வீரர் உடலை பார்க்க சென்ற ராகுல் காந்தி கைது

    தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார்.

    இந்நிலையில், அரியானா மாநிலம், பிவானி மாவட்டம், பூம்லா கிராமத்தில் வசிக்கும் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய ராம் கிஷன், ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி  தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

    இதைகேட்ட குடும்பத்தினர் பதறிய நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ராம் கிஷன் கிரேவால் இன்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷனின் தற்கொலை மூலம் ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பொய் பிரசாரமும், கையாலாகத்தனமும் வெளிப்பட்டிருப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தில் உள்ள ராம் கிஷனின் வீட்டுக்கு சென்று அவரது இறுதி ஊர்வலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் ராம் கிஷனின் உடல் வைக்கப்பட்டுள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற முயன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தியதாக முன்னர் தகவல் வெளியானது.

    அந்த தடையைமீறி ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைதுசெய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு பேட்டியளித்த டெல்லி நகர போலீஸ் துணை கமிஷனர் மீனா, போராட்டங்களை நடத்துவதற்கு ஆஸ்பத்திரி உகந்த இடமல்ல. இங்கு போராட்டம் நடத்த யாரையும் அமுமதிக்க மாட்டோம். எங்கள் கடமைக்கு இடையூறாக இருப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல், ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு சென்று ராம் கிஷனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற முயன்ற டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா மற்றும் சில ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களையும் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
    Next Story
    ×