search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
    X

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கியது.

    அதன்பிறகு பாகிஸ்தான் படைகள் காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் எல்லை நெடுகிலும் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

    நேற்று மாலையில் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டது. இந்த ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் 3 முறை தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் உரியில் ராணுவ முகாம் தாக்கப்பட்டது போன்று மேலும் ஒரு ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினார்கள். வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹேண்ட் வாரா பகுதியில் லாங்கேட் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த ராணுவ முகாம் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே முகாமில் இருந்த வீரர்கள் உஷார் ஆகி நாலாபுறமும் விரைந்து சென்று தீவிரவாதிகள் மீது எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

    ராணுவ முகாமுக்கு வெளியே கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது காலை 6.30 மணி அளவில் மீண்டும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடப்பதாகவும் கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இறுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் இந்திய தரப்பில் எந்த சேதமும் இல்லை என்றும் ராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
    Next Story
    ×