search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைத்தளங்களில் சசிகலா புஷ்பா பற்றிய அவதூறு செய்திகள் வெளியிட தடை: டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
    X

    சமூக வலைத்தளங்களில் சசிகலா புஷ்பா பற்றிய அவதூறு செய்திகள் வெளியிட தடை: டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., பற்றிய அவதூறு செய்திகள், படங்கள் வெளியிட தடை விதித்து, சமூக வலைத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி., டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் அபினவ் மூலம் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    எனக்கு செப்டம்பர் 19-ந் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நான் எனது அரசியல் சாசன பதவியை விட்டு விலக வேண்டும் என்று மிரட்டினார். அவ்வாறு நான் செய்யாவிட்டால், சமூக வலைத்தளங்களில் என் நடத்தையைப் பற்றி தவறான வதந்திகளையும், குற்றசாட்டுகளையும் பரப்பப்போவதாக மிரட்டினார். அத்துடன் ஏராளமான படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாகவும் அவர் எச்சரித்தார்.

    இவையெல்லாம் எனது அடிப்படை உரிமைகளை பாதிக்கக்கூடிய விஷயங்கள் ஆகும். இவை எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துபவை ஆகும்.

    எனவே என்னைப்பற்றிய அவதூறான செய்திகளை, வதந்திகளை, படங்களை பரப்புவதில் இருந்து சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகுள், யு டியுப், டுவிட்டர் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வழக்கில் கூறி உள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.கே.காபா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா புஷ்பா எம்.பி., சார்பில் மூத்த வக்கீல் சச்சின் புரி ஆஜராகி வாதாடினார்.

    அவர், 'எனது கட்சிக்காரர் சசிகலா புஷ்பா எம்.பி., பதவியை விட்டு விலக மறுத்ததைத் தொடர்ந்து, சில மர்ம நபர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அதாவது, அவர்கள் சசிகலா புஷ்பா பற்றிய படங்களை அனைத்து ஊடகங்களுக்கும் வினியோகம் செய்வதுடன், அவற்றை சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தி உள்ளனர். இது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். அவரை தர்ம சங்கடத்திலும் ஆழ்த்தும். எனவே அவற்றை பரப்ப தடை விதிக்க வேண்டும்' என வாதிட்டார்.

    அதைத் தொடர்ந்து, 'சசிகலா புஷ்பா எம்.பி., பற்றிய அவதூறு படங்களை உடனடியாக சமூக வலைத்தளங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். அவை அவருக்கு மீட்க முடியாத பாதிப்பையும், சீர் செய்ய முடியாத பாரபட்சத்தையும் ஏற்படுத்திவிடும்' என நீதிபதிகள் கூறினர்.

    மேலும், 'அவரைப்பற்றி அவதூறு ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் வெளியிடுவதும், செய்தி வெளியிடுவதும் தடை செய்யப்படுகிறது. ஏற்கனவே வெளியிட்டுள்ளவற்றையும் உடனே நீக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார்.

    அத்துடன் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு நோட்டீசு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×