search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு
    X

    காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு: கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

    தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) கன்னட அமைப்புகள் சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாநிலத்தில் இன்று பஸ்-ஆட்டோக்கள் ஓடாது. பள்ளி-கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 6-ந் தேதி நள்ளிரவு முதல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்தும் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த 5-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-ந் தேதி மண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. நேற்று 4-வது நாளாக அங்கு தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

    இதனால் பெங்களூரு-மைசூரு இடையே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர கன்னட அமைப்புகள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை கண்டித்து 9-ந் தேதி(இன்று) கன்னட அமைப்புகள் சார்பில் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.

    இந்த முழு அடைப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வக்கீல்கள் சங்கம், கர்நாடக சினிமா தொழில் வர்த்தக சபை, வாடகை கார்கள் ஓட்டுனர் சங்கம், ஆட்டோ டிரைவர்கள் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் கர்நாடகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. குறிப்பாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு பஸ்கள் சாலையில் இயங்காது. மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பெங்களூருவில் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் நிலைமையை பொறுத்து விடுமுறையை அறிவிப்பது குறித்து முடிவு எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்படுகின்றன. பெங்களூருவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்காது. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய கடைகள் வரை அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் மூடப்படும். பெட்ரோல் பங்க்குகள் செயல்படாது. வங்கி ஊழியர்களும் பணியை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். இதனால் வங்கிகளும் செயல்படாது.

    மென்பொருள் நிறுவனங்கள் உள்பட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளன. முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணி விடுப்பு எடுப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், ஆம்புலன்சு வாகனங்கள், மருந்து கடைகள், பால் விநியோகம் வழக்கம்போல் செயல்படும். இந்த சேவையில் எந்த பிரச்சினையும் இருக்காது.

    பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று தமிழ் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்று கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. அதன்படி சுமார் 53 தமிழ் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்பையொட்டி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போலீசார் கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு குறித்து கருத்து தெரிவித்து உள்ள முதல்-மந்திரி சித்தராமையா, “முழு அடைப்பின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைக்கக்கூடாது. பொறுமை இழக்காமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்“ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் மந்திரி பரமேஸ்வரிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மனு கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    கர்நாடகத்தில் கடந்த ஜூலை மாதம் மகதாயி நதி நீர் பிரச்சினைக்காக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு நடத்தின. கடந்த 2-ந் தேதி தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இப்போது கன்னட அமைப்புகள் காவிரி பிரச்சினைக்காக முழு அடைப்பு நடத்துகின்றன. ஆகமொத்தம் கடந்த 3 மாதங்களில் இது 3-வது முழு அடைப்பு போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
    Next Story
    ×